மூக்கு வழியே கொரோனா தடுப்பு மருந்து: மருத்துவரின் முக்கிய அறிவுரை!

Published On:

| By Kavi

பூஸ்டர் டோஸ் எடுத்தவர்கள் நாசி தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று மருத்துவர் என்.கே.அரோரா கூறியுள்ளார்.

கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க ஏற்கனவே இந்தியாவில், கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக்-வி உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

ADVERTISEMENT

கடந்த இரண்டு ஆண்டுகளில் தடுப்பூசி போட்டதன் விளையாக இந்தியா 90 சதவிகித நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொண்டுள்ளதாக சுகாதாரத் துறை கூறுகிறது.

இந்நிலையில் ஒமிக்ரானின் துணை வகையான பிஎப் 7 வைரஸ் தற்போது மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதிலிருந்து மக்களைக் காக்க மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வரும் நிலையில், கடந்த வாரம் மூக்கு வழியே செலுத்தப்படும் மருந்துக்கு ஓப்புதல் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

அதன்படி, கோவின் போர்ட்டலில் பட்டியலிடப்பட்டுள்ள தடுப்பூசிகள் வரிசையில் பார்த் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ள மூக்கின் வழியே செலுத்தப்படும் iNCOVACC மருந்து இடம்பெற்றுள்ளது.

people who take booster dose dont take nasal vaccine

இது தனியார் மருத்துவமனைகளில் ரூ.800க்கும், மத்திய மாநில அரசுகளுக்கு ரூ.325க்கும் வழங்கப்படும் என்று பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், இந்த புதிய வகை தடுப்பூசியை எப்படிப் போட்டுக்கொள்வது, ஏற்கனவே பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்டவர்கள் இதனை போட்டுக்கொள்ளலாமா என பல்வேறு சந்தேகம் மக்கள் மத்தியிலிருந்து வருகிறது.

இதுகுறித்து நாட்டின் தடுப்பூசி பணிக்குழுவின் தலைவர் என்.கே.அரோரா என்டிடிவியிடம் விளக்கமளித்துள்ளார்.

“இந்த நாசி தடுப்பூசி முதஸ் பூஸ்டராக பரிந்துரைக்கப்படுகிறது. அதாவது ஒரு நபர் ஏற்கனவே பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தால் அவருக்கு இந்த நாசி தடுப்பூசி பரிந்துரைக்கப்படுவதில்லை. இது பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொள்ளாதவர்களுக்கானது” என்று தெரிவித்துள்ளார்.

நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவரான அரோரா மேலும் கூறுகையில், “ஏற்கனவே பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்டவர்கள், நான்காவது முறையாக ஒரே வகையான ஆண்டிபாடியை உட்செலுத்தும் போது அதனை உடல் எடுத்துக்கொள்ளாது. அல்லது அந்த மருந்து மெதுவாகத்தான் வேலை செய்யும் .

அதனால் தான் ஆரம்பத்தில் mRNA மருந்துகள் ஆறு மாத இடைவெளியில் செலுத்தப்பட்டன. பின்னர் மக்கள் 3 மாத இடைவெளியில் எடுத்துக்கொண்டார்கள். இது அந்தளவுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டுபடுத்தவில்லை. எனவே ஒரே வகையான ஆண்டிபாடியை நான்காவது டோஸாக போட்டுக்கொள்ளும் போது அது பலனளிக்காது” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், “மூக்கு வழியாக மருந்து செலுத்துவதன் மூலம் கொரோனா மட்டுமின்றி அனைத்து சுவாச வைரஸ்கள் மற்றும் தொற்றுநோய்களுக்கு எதிராகப் போராடுவதற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் நாசி தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம். இதை எடுத்துக்கொள்வது மிகவும் எளிமையானது.

ஒவ்வொரு மூக்குத் துளை வாயிலாகவும் 4 சொட்டுகள் போடப்படும். மொத்தம் 0.5 மி.லி அளவுக்குத்தான் மருந்து செலுத்தப்படும். இது மிகவும் பாதுகாப்பான தடுப்பூசி. மற்ற தடுப்பூசிகள் போட்ட பிறகு 15 முதல் 30 நிமிடங்கள் வரை, வேறேனும் எதிர்வினை ஆற்றுகிறதா என காத்திருக்க வேண்டும். ஆனால் இதற்கு அப்படி காத்திருக்க வேண்டியதில்லை” என்று தெரிவித்தார்.

மூக்கு வழியே செலுத்திக்கொள்ளும் இந்த தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு மீண்டும் ஒரு பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டுமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், “மேலும் தடுப்பூசிகள் தேவைப்படுமா அல்லது தேவைப்படாதா என்பதற்கான எந்த ஆதராமும் தற்போது வரை இல்லை.

மக்கள் மூன்று, நான்கு, ஐந்து டோஸ் எடுத்துக்கொண்ட வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில், குறிப்பாக mRNA தடுப்பூசிகள் எடுத்துக்கொண்ட நாடுகளில் கூட மக்கள் தொடர்ந்து தொற்று நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.

பிரியா

‘இந்தியாவில் இப்படித்தான் இருக்கும்’ : சித்தார்த்தை துன்புறுத்திய சிஆர்பிஎப்!

டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா: பிசிசிஐ வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share