தக்காளி விற்கும் விலைக்கு ஆப்பிள் வாங்கி சாப்பிடலாம் என்று விலை உயர்வை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட காவடிக்காரனூரில் அதிமுக சார்பில் கொடியேற்று விழா இன்று (ஜூலை 23) நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு அதிமுகவின் கொடியேற்றி வைத்து உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, ”எடப்பாடி தொகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
அதிமுக கொண்டு வந்த ஒவ்வொன்று திட்டங்களையும் திமுக அரசு முடக்கி வருகிறது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கூட்டு குடிநீர் திட்டம், 100 ஏரிகள் புனரமைப்பு திட்டத்தினை திமுக அரசு முடக்கி வைத்துள்ளது.
அறிவுப்பூர்வமான கல்வி கிடைக்கும் வகையில் வழங்கப்பட்ட லேப்டாப்களையும் அரசு நிறுத்தி உள்ளது.
ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்ட முதியோர்களுக்கான உதவித் தொகை பலருக்கு நிறுத்தப்பட்டுள்ளது.
மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் எந்தெந்த முதியோருக்கு உதவித் தொகை நிறுத்தப்பட்டதோ அவர்களுக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்படும்.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை முடக்கியதே திமுக அரசின் சாதனை. திமுக தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.
அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் எந்த நிபந்தனையும் இல்லாமல் வழங்கப்படும் என அறிவித்தார். தற்போது தகுதியானவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஆட்சியில் இருக்கும்போது ஒரு பேச்சு எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு
கட்டுமான பொருட்கள் விலை 100 சதவீதம் உயர்ந்துள்ளது. சிமெண்ட், கம்பி விலை விலை விண்ணை முட்டும் வகையில் உயர்ந்துள்ளது.
சிமெண்ட் தொழிற்சாலை அதிபர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தங்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதற்காக அவர்கள் கூறுவதை சரியாக செய்கின்றனர். இதனால் ஏழை மக்களின் வீடு கட்டும் கனவு எட்டாக்கனியாகியுள்ளது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயராமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் தற்போது விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.
தக்காளி விற்கும் விலைக்கு ஆப்பிள் வாங்கிக் கொள்ளலாம். ஏனெனில் இரண்டும் ஒரே விலைதான் விற்கிறது. எடை கணக்கில் தக்காளி வாங்கிய நிலை மாறி தற்போது எண்ணிக்கை கணக்கில் பயன்படுத்தும் நிலை உள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்டாலினுக்கு குடும்பம்தான் முக்கியம், மக்கள் முக்கியமல்ல. தனக்கு பிறகு தன் மகனை ஆட்சி அதிகாரத்தில் கொண்டுவர வேண்டும் என்பதுதான் அவரின் நோக்கம்.
மக்கள் படும் துயரங்கள் வேதனைகள் பற்றி முதல்வருக்கு கவலை இல்லை” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
ஆசிய கோப்பை பைனல்: பாகிஸ்தானின் இலக்கை தாண்டுமா இந்தியா?
மணிப்பூர் கலவரம்… குக்கி இன மக்களுக்கு எதிராக பாஜக முதல்வர்: கனிமொழி
