தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்திற்காக 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் நான்கு நாட்கள் விடுமுறையில் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். விடுமுறை முடிந்து அவர்கள் நேற்று பகல் முதலே சென்னை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
குறிப்பாக இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும், அரசு மற்றும் தனியார் பேருந்துகளிலும், ரயில்களிலும் சென்னைக்கு அதிகளவிலான பொதுமக்கள் திரும்பி வருகின்றனர்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகம் என்பதாலும், முன்பதிவு செய்த அரசு பேருந்துகளே அதிகளவில் இயக்கப்பட்டதால் என்பதாலும் சாமானிய மக்கள் பேருந்து நிலையங்களில் அலை மோதிய காட்சிகளை காண முடிந்தது.
நேற்று மாலை முதல் தற்போது வரை திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடி முதல் வீராபுரம் வரை சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
இதற்கிடையே தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் நேற்று ஒரே நாளில் 75 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
தீபாவளிப் பண்டிகை முடிந்த பின்னர் தமிழகத்தின் பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காகவும் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு பேருந்துகளின் இயக்கம் நள்ளிரவு 12 மணி நிலவரப்படி, சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 2,561 சிறப்பு பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கு வழக்கமாக இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 3,912 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.
இதில் நேற்று மட்டும் 79,626 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர். இது முன்பதிவு செய்து பயணம் மேற்க்கொண்ட பயணிகள் எண்ணிக்கையின் அதிகபட்ச உச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தொடரும் கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த கலெக்டர்!
12 மருத்துவர்கள் இருக்க வேண்டிய நிலையில் ஒரே மருத்துவருடன் இயங்கும் அரசு மருத்துவமனை!
