ஜனவரி மாதம் இந்தியா – இலங்கை இடையே மீண்டும் கப்பல் சேவையை தொடங்க உள்ளதாக இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையேயான கடல்வழியில் 48 கிலோமீட்டர் தூரத்திற்கு 1914-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
இது 1984-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. அதன்பிறகு இலங்கை – தமிழகம் இடையே கப்பல் போக்குவரத்து இல்லை.
இந்தியாவின் நட்பு நாடாக உள்ள இலங்கையில் தமிழர்கள் ஏராளமானோர் உள்ளனர். குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள்,
இலங்கையுடன் தொழில் ரீதியாக அதிகம் உறவு வைத்துள்ள நிலையில், கப்பல் சேவை தொடங்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
ஆனால், சர்வதேச கடல் எல்லை என்பதால் அதற்கான அனுமதி பெறுவது சிக்கலாக இருந்துள்ளது.
இந்நிலையில், இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வா இந்தியா – இலங்கை இடையே பயணிகள் படகு சேவை அடுத்த மாதம் (2023,ஜனவரி) முதல் தொடங்கப்பட உள்ளதாக கூறியதாக இலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள காங்கேசன் துறைமுகத்தையும், புதுச்சேரியையும் இணைக்கும் வகையில் இந்த படகு சேவை அமையும் எனவும் இதற்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக இலங்கை அமைச்சர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தென்னிந்தியாவில் இருந்து திருகோணமலை, கொழும்பு நகரங்களுக்கும் விரைவில் சேவைகள் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் தொடங்கவுள்ள கப்பல் பயணத்தில் 300 முதல் 400 பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையிலும், மூன்றரை மணி நேரத்தை பயண நேரமாக கணக்கிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இருந்து இலங்கை செல்ல பயணி ஒருவருக்கு 5,000 ரூபாய் கட்டணம் என்றும், ஒவ்வொரு பயணியும் 100 கிலோ எடையுள்ள பொருட்களை கொண்டு செல்ல அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் தென்னிந்தியர்கள் ஏராளமானவர்கள் வணிகம் செய்து வருகின்றனர். படகு போக்குவரத்து துவங்குவதன் மூலம், வெளிநாட்டு வருமானம் கிடைக்கும்.
இந்தியாவிற்கு செல்லும் புத்த மதத்தை சேர்ந்தவர்களுக்கும் உதவியாக இருக்கும் என்று இலங்கை என இலங்கை அமைச்சர் கூறியுள்ளார்.
கலை.ரா
மிளகாய்ப்பொடி தூவி மருமகன் ஆணவக்கொலை: காதலுக்கு மீண்டும் ஒரு பலி!
இந்தியாவை விமர்சித்த இன்போசிஸ் நிறுவனர்!
