மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், ஹை வோல்டேஜ் மின்சாரம் வருவதாகக் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உசிலம்பட்டி – தேனி ரோட்டில் உள்ள சீதா தேவர் சாலையில் கடந்த ஒரு மாதமாக ஹை வோல்டேஜ் மின்சாரம் வருவதாகக் கூறப்பட்டது. மேலும், அந்தத் தெருவில் உள்ள நித்தியா என்ற பெண்ணை மின்சாரம் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் ஹை வோல்டேஜ் மின்சாரம் காரணமாகப் பழுதடைந்துள்ளது.
இதுகுறித்து மின்சாரத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் உசிலம்பட்டி – தேனி சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மின்சாரத் துறை அதிகாரிகளை அழைத்து விரைவில் சரி செய்து விடுவதாக கூறினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
**-ராஜ்**
