போக்குவரத்து ஓய்வூதியம்: அகவிலைப்படி உயர்வை வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்!

Published On:

| By Prakash

“போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு தீபாவளி பரிசாக அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை வெளியிட வேண்டும்” என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்று 2015ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ADVERTISEMENT

அதன் பிறகு நான்கு முறை அகவிலைப்படி உயர்த்தப்பட்டபோதும், போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கவில்லை.

இதையடுத்து, அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ADVERTISEMENT
pension for transport employees ramadoss request

இந்த வழக்கு நீதிபதி சத்தியநாராயண பிரசாத் முன்பு கடந்த செப்டம்பர் மாதம் விசாரணைக்கு வந்தபோது, ”பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பலன்களை வழங்க வேண்டும் என்ற கேள்வி எழும்போதெல்லாம் நிதி நெருக்கடி என்ற பதிலையே அரசு கூறுகிறது. நிதி நெருக்கடியை காரணமாக கூறும் அரசு, சமீபத்தில் அகவிலைப்படி உயர்வை அறிவித்தது எப்படி?

எனவே, அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வரும் நவம்பர் முதல் வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

ADVERTISEMENT

இந்த நிலையில், “போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு தீபாவளி பரிசாக அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை வெளியிட வேண்டும்” என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (அக்டோபர் 22) வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை நவம்பர் மாத ஓய்வூதியத்தில் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டு 50 நாட்களாகிவிட்ட நிலையில், அதன் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருத்தமளிக்கிறது.

pension for transport employees ramadoss request

நவம்பர் மாத ஓய்வூதியம் வழங்கப்படுவதற்கு இன்னும் குறுகிய காலமே உள்ளது. போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கியது குறித்த அறிக்கையை நவம்பர் 25-ஆம் தேதி நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்ய வேண்டும்.
ஆனால், அதற்கான அறிகுறிகள் கூட தென்படவில்லை.

போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் 89 ஆயிரம் பேருக்கு கடந்த 83 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. குடிநீர் வாரியம் உள்ளிட்ட பல துறைகளின் ஓய்வூதியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கு மட்டும் மறுப்பது நியாயமல்ல.

எனவே, போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு தீப ஒளி பரிசாக அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை வெளியிட வேண்டும். கடந்த இரு ஆண்டுகளில் விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார்.

ஜெ.பிரகாஷ்

இடம் பொருள் ஏவல்: ரிலீஸ் தாமதம் ஏன்?

மாநில அரசு தொலைக்காட்சி: ஒளிபரப்புக்கு மத்திய அரசு தடை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share