கல்யாணத்துக்கு ஜோடிப் பொருத்தம் அமைவது போல, உணவுக்கு ‘சைடிஷ் பொருத்தம்’ அமைவதும் ரொம்பவே அவசியம். காலையில் எழுந்த உடனேயே, ‘இன்னிக்கு என்ன சமையல் பண்ணலாம் என்பதைவிட, அதற்கு என்ன சைடிஷ் பண்றது?’ என்று யோசிப்பவர்கள் ஏராளம். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த வெள்ளைப் பட்டாணி மசாலா உதவும்.
என்ன தேவை?
- வெள்ளைப் பட்டாணி – முக்கால் கப்
- பொடியாக நறுக்கிய வெங்காயம் – கால் கப்
- புளிக்கரைசல் – இரண்டு டேபிள்ஸ்பூன்
- மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
- கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
- சோம்பு – அரை டீஸ்பூன்
- கொத்தமல்லித்தழை – சிறிதளவு
- எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
அரைக்க…
- வெங்காயம் – ஒன்று
- தக்காளி – மூன்று
- காய்ந்த மிளகாய் – நான்கு
- தனியா (மல்லி) – இரண்டு டீஸ்பூன்
- இஞ்சி – கால் அங்குலத் துண்டு
- பூண்டு – ஐந்து பற்கள்
எப்படிச் செய்வது?
பட்டாணியை எட்டு மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் நான்கு விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும். அரைப்பதற்குக் கொடுக்கப்பட்டுள்ள பொருள்களைச் சிறிது தண்ணீர்விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய்விட்டு சூடானதும் அதில் சோம்பு சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு மஞ்சள்தூள், அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். அவை வதங்கியதும் புளிக்கரைசலைச் சேர்க்கவும். இதில் தேவையான அளவு உப்பு, வேகவைத்த பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி மூடிவைத்து எட்டு விசில் வரும்வரை வேகவைக்கவும். இறக்கும்போது கரம் மசாலாத்தூள் சேர்த்து, லேசாக கொதிவந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
