யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம், நானும் நிற்கிறேன் என்று நடிகர் பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது வைரலாகி வருகிறது.
நடிகர் பார்த்திபன் தற்போது தனுஷ் இயக்கி நடித்திருக்கும் இட்லிக்கடை படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில் தனது புதிய படத்தின் அறிவிப்பை இன்று (செப்டம்பர் 13) வெளியிட்டுள்ளார் பார்த்திபன்.
இன்று காலை அவர் வெளியிட்ட அறிவிப்பில், ‘மாலை 4.46 மணிக்கு அரசியல் களத்திற்குள் அதிர்வலையை ஏற்படுத்தும் அறிவிப்பு ஒன்று வரப்போகிறது. உஷார்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து, இன்று தனது முதல் பிரச்சாரத்தை தொடங்கியிருக்கும் சமயத்தில் பார்த்திபனின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பேசு பொருளானது.
கமல்,விஜய் போல் இவரும் கட்சி தொடங்கப் போகிறாரா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில் இன்று மாலை பார்த்திபன் வெளியிட்ட பதிவில், “பெரியோர்களே, தாய்மார்களே, வாக்காளப் பெருமக்களே! ஜனநாயக உரிமை யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். நானும் நிற்கிறேன் .
என்னை உட்கார வைக்க வேண்டியது உங்கள் கடமை. நான் CM நாற்காலியில் அமர்ந்தப் பிறகு போடப் போகும் முதல் கையெழுத்து எனக்குப் பிறகு அந்த சீட்டில் யாருமே அமரக் கூடாது என்பது தான்!
போடுங்கம்மா ஓட்டு Boat’சின்னத்தைப் பாத்து!
இப்படிக்கு, C. M . சிங்காரவேலன் எனும் நான்….
‘சோத்துக் கட்சி’” என்று தனது புதிய பட அறிவிப்பை தனக்கே உரிய பாணியில் அறிவித்துள்ளார்.
