இயக்குனர் பாண்டிராஜ், நாயகன் விமல், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் எனப் பலர் மீது வெளிச்சம் பாய்ச்சிய படம் ‘பசங்க’. சுப்பிரமணியபுரம், நாடோடிகள் படத்திற்குப் பிறகு ஒரு தயாரிப்பாளராகச் சசிகுமாருக்குப் பெருமளவில் பாராட்டுகள் கிடைக்கச் செய்த படமிது.
இதில் குழந்தை நட்சத்திரங்களாக கிஷோர், ஸ்ரீராம், தமிழ் உள்ளிட்ட சிலர் நடித்திருந்தனர். 2009இல் இப்படம் வெளியானது. மேற்சொன்ன மூவரும் விடலைப் பருவத்தினராக, இளைஞர்களாகச் சில படங்களில் நடித்துள்ளனர்.
அந்த வகையில் கிஷோர் ஒரு தெலுங்கு படத்தில் நாயகனாகத் தோன்றியிருக்கிறார். அப்படத்தின் பெயர் ’பிரேம கதா’. இடிவி வின் ஒரிஜினல்ஸ் தளத்தில் இப்படம் வரும் 21ஆம் தேதியன்று (நாளை) வெளியாகிறது.
ஒரு எளிமையான பின்னணி கொண்ட ஒரு இளைஞன் செல்வ வளம் அதிகமிருக்கிற ஒரு குடும்பத்துப் பெண்ணைக் காதலிக்கிற வழக்கமான கதையே இதில் இருக்கிறது என்பதாக உள்ளது ‘பிரேம கதா’ ட்ரெய்லர். அதையும் மீறி, இப்படத்தில் கதாபாத்திரச் சித்தரிப்பு சிறப்பாக இருக்குமென்ற நம்பிக்கையையும் விதைக்கிறது.
குறிப்பாக, கிஷோருக்கு இப்படத்தில் நிறையவே பெயரும் பாராட்டுகளும் கிடைக்குமென்று உணர்த்துகிறது ட்ரெய்லர். இதில் தியா சீதாபல்லி அவரது ஜோடியாக நடித்துள்ளார். சிவஷக்தி ரெட் தே இதனை இயக்கியிருக்கிறார்.
