திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன்படி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக பகுதி நேர ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் அறிவித்துள்ளார்.
தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி கொடுத்துவிட்டு ஆட்சிக்கு வந்து 29 மாதமாகியும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.
12 ஆயிரம் குடும்பங்கள் 12 ஆண்டாக ரூபாய் 10 ஆயிரம் சம்பளத்தில் வாழ்வாதாரம் இழந்து உள்ளனர்.
இதனால் சட்டமன்ற தேர்தலில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு கொடுத்த 181-வது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என போர்க்கொடி தூக்கி உள்ளனர் அரசுப் பள்ளிகளில் 12 ஆண்டாக பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள்.
சட்டமன்றமும் வருகின்ற அக்டோபர் 9ஆம் தேதி கூடவுள்ளது என்பதால் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரிக்கை எழுந்து வருகிறது.
இது குறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது,
”முதல்வர் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் உள்ளதால் தான் கோட்டை முற்றுகையிடும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டு விட்டோம்.
கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் கோட்டைக்கே வந்து என்னை சந்தித்து கேளுங்கள் என உங்கள் தொகுதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் தருமபுரி, கன்னியாகுமரி, மயிலாடுதுறையில் சொன்னதை,
முதல்வராகி இன்னும் செய்யாமல் உள்ளதை பலவழியில் நினைவுபடுத்தியும் அதை கண்டுகொள்ளவில்லை என்ற ஆதங்கம் எல்லோர் மத்தியில் உள்ளது.
பணி நிரந்தரம் கிடைக்காத ஏக்கத்தில் மரணம் அடைந்த பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பத்தை முதல்வர் நினைத்துப் பார்க்க வேண்டும்.
10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்கள் 12 ஆண்டாக பரிதவிப்பதை மனிதாபிமானம் கொண்டு முதல்வர் மீட்டுப் பணி நிரந்தரம் என்ற வாழ்வாதாரத்தை தர வேண்டும்.
இவை தேர்தல் வாக்குறுதி 181-ஐ நிறைவேற்றி 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய முதல்வர் ஆணையிட்டால் தான் நடக்கும்.
இனியும் தாமதம் செய்ய வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.