இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் SIR குறித்து நாடாளுமன்றத்தில் இன்றும் நாளையும் சிறப்பு விவாதம் நடைபெற உள்ளது.
பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் உள்ளிட்டோரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு புதிய பட்டியலை தயாரிப்பதுதான் SIR என்கிறது தேர்தல் ஆணையம். ஆனால் குறுகிய கால அவகாசத்தில் அவசரம் அவசரமாக SIR பணிகளை மேற்கொள்வதால் பல லட்சக்கணக்கான மக்கள் வாக்குரிமைகளை இழப்பர் என்பது எதிர்க்கட்சிகளின் கருத்து.
SIR-க்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் SIR குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இன்றும் நாளையும் SIR குறித்து விவாதம் நடைபெற உள்ளது. மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்த விவாதத்தைத் தொடங்கி வைக்கிறார். மொத்தம் 10 மணி நேரம் இந்த விவாதம் நடைபெறும். விவாதத்தின் முடிவில் மத்திய அமைச்சர் அர்ஜூன் மேக்வால் பதிலளிப்பார்..
