மக்களவை தேர்தல்: போக்குவரத்து துறை முக்கிய அறிவுறுத்தல்!

Published On:

| By Selvam

மக்களவை தேர்தலுக்காக சொந்த ஊருக்கு செல்வோர் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, முந்தைய நாளை (ஏப்ரல் 18) தவிர்த்து முன்கூட்டியே பயணத்தை திட்டமிட போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) நடைபெறவுள்ளது. சென்னை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு லட்சக்கணக்கானோர் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மக்கள் சிரமமின்றி பயணிக்க வசதியாக ஏப்ரல் 17,18 ஆகிய தேதிகளில் 10,214 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத் துறை ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், வாக்குப் பதிவுக்கு முந்தைய நாளான 18-ஆம் தேதி கடைசி நேரத்தில் பயணித்து நெரிசலில் சிக்கிக் கொள்வதை தவிர்க்க 16, 17 தேதிகளில் அரசுப் பேருந்துகளில் காலியாக உள்ள முன்பதிவு இருக்கைகளில் பயணம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் மொத்தமுள்ள 30,630 இருக்கைகளில் 29,608 இருக்கைகளும், நாளை (புதன்கிழமை) 24,833 இருக்கைகளும் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க முன்கூட்டியே பயணத்தை திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள போக்குவரத்து துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share