உடல் எடையைச் சீராகப் பராமரிக்க நினைப்பவர்களுக்கான பெஸ்ட் சாய்ஸ் இந்த அடை. புரதச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட், தாது உப்புக்கள், வைட்டமின்கள் நிறைந்துள்ள இந்த அடையைச் சாப்பிட்டால் சீக்கிரமே பசிக்காது. திடமான காலை உணவாக அமையும். பரங்கிக்காயைச் சாப்பிடாதவர்களும் இந்த அடையை விரும்பிச் சாப்பிடுவர். சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்த நோயாளிகளுக்கு ஏற்ற சத்தான உணவு.
என்ன தேவை? Parangikai Adai
பச்சரிசி – 2 கப்
கடலைப் பருப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், மஞ்சள் பரங்கிக்காய் துருவியது – தலா ஒரு கப்,
பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் – தலா 3
கொத்தமல்லி, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது? Parangikai Adai
அரிசி, பருப்பு இரண்டையும் தனித் தனியாக ஊறவைக்க வேண்டும். பருப்பை சிறிது முன்கூட்டியே ஊறவைத்துவிட வேண்டும். ஏனெனில், கடலைப் பருப்பு ஊற, சிறிது நேரம் ஆகும். நன்கு ஊறியதும், இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொர கொரவென்று அரைக்க வேண்டும். காய்ந்த மற்றும் பச்சை மிளகாயை ஊறவைத்து தனியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
அரைத்த மாவில் தேவையான மிளகாய் விழுது, உப்பு, வெங்காயம், பரங்கிக்காய், கறிவேப்பிலை, கொத்தமல்லியைக் கலக்க வேண்டும். தோசை செய்வதுபோல கொஞ்சம் திக்காக அடைபோல தவாவில் சுட்டு எடுக்கலாம். இதற்கு வெங்காயம் அல்லது தக்காளிச் சட்னி பொருத்தமாக இருக்கும்.