அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வராததால் பரந்தூர் விமான நிலைய கருத்துக்கேட்பு கூட்டத்தில் இருந்து மக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
தமிழகத்தின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்பதூர் அருகே உள்ள பரந்தூரில் அமைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான கருத்துக்கேட்புக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஆகஸ்டு 16) நடைபெற்றது.

கருத்துக் கேட்பு கூட்டம் தொடர்பான அறிவிப்பு நேற்று கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் வெளியானது. பரந்தூர் விமான நிலையம் அமைய இருக்கும் சுற்றுவட்டார 12 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், ஒரு கிராமத்திற்கு ஐந்து பேர் வீதம் இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் காலை முதல் மக்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்கள். காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டத்தில் மூன்று மணி நேரம் ஆகியும், கூட்டத்தில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்ட அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ வேலு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் மூன்று மணி நேரமாகியும், மதியம் 1 மணி வரையில் வராததால் கூட்டத்தில் பங்கேற்ற ஒரு பகுதி கிராமத்தினர் கருத்துகேட்பு கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

கருத்துக் கேட்பு கூட்டத்திலிருந்து, கலைந்து சென்ற மக்களிடம் பேசி போலீசார் சமாதானம் செய்ய முயன்றனர். இதனால் மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இருப்பினும், கூட்டத்தை புறக்கணிக்காத மக்களிடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. கருத்து கேட்பு கூட்டம் காலை 10 மணிக்கு ஆரம்பித்த நிலையில், 1 மணி வரையில் அமைச்சர்கள் வரவில்லை. ஒரு மணிக்கு பின்னர் அமைச்சர்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
செல்வம்
