பரமக்குடி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு இன்று (மார்ச் 9) உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவியை கடந்த மாதம் காரில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளாக இதுவரை பரமக்குடி அதிமுக கவுன்சிலர் சிகாமணி, புதுமலர் பிரபாகர், ராஜா முகமது, கயல்விழி, உமா என 5 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கில் அதிமுகவை சேர்ந்த மேலும் சிலருக்கும் தொடர்பு உள்ளதாக நம்பப்படுகிறது.
இதனையடுத்து வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும், வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இன்று பரமக்குடியில் பல்வேறு சங்கங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு கவனம் செலுத்தி புலன் விசாரணை செய்ய சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தற்போது உத்தரவிட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா