“ஓ.பன்னீர்செல்வம் இனி எந்தவொரு தவறான வழிக்கும் செல்லமாட்டார்” என எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரும் எம்.எல்.ஏவுமான ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளின்படி மதுரை திருப்பரங்குன்றம் மற்றும் மேலூர் தொகுதிகளின் 10 பிரச்சினைகள் அடங்கிய பட்டியலை மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் இன்று (செப்டம்பர்) எம்.எல்.ஏக்கள் வி.வி.ராஜன் செல்லப்பா மற்றும் பெரியபுள்ளான் ஆகியோர் வழங்கினார்கள்.
அதன் பின்னர் இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா, “சொத்து வரிஉயர்வு, மின் கட்டண உயர்வினால் திமுகவை மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாத சூழலில் உள்ளனர். மகளிர் இலவச பேருந்துகளில் ஏறுவதற்கு பெண்கள் மணிக்கணக்கில் காத்திருக்கிறார்கள். பயனற்ற பேருந்துகள் மட்டுமே இலவச பேருந்துகளாக இயக்கப்பட்டு வருகிறது. எய்ம்ஸ் மருத்துவமனையைப் பொறுத்தவரை மாநில அரசு அழுத்தம் கொடுக்கவில்லை. நாங்கள் கொடுக்கும் கடிதங்களை மாநில அரசு மத்திய அரசிடம் கொடுக்கிறது.
அதிமுக திட்டங்களை முடக்கும் திமுக!
தாலிக்குத் தங்கம் திட்டம், மினி கிளினிக் திட்டத்தை நிறுத்திவிட்டார்கள். அம்மா உணவகத்தை மூடும் முயற்சியில் இறங்கி உள்ளார்கள். அதிமுக அரசில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை முடக்கும் நடவடிக்கைகளிலேயே திமுக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. திமுக அரசு மக்கள் நலனுக்கு எந்தவொரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட பாலங்கள், கட்டிடங்களைத் தான் முதல்வர் இப்போது திறந்து வைத்து வருகிறார்.

ஓ.பன்னீர்செல்வம் இனி எந்தவொரு தவறான வழிக்கும் செல்லமாட்டார் என நினைக்கிறேன். அவருடன் இருப்பவர்கள்தான் அவரை தவறான வழிக்கு அழைத்துச் செல்கிறார்கள். ஏற்கெனவே ஓ.பன்னீர்செல்வம் தவறைச் செய்துவிட்டு அதிலிருந்து தப்பிக்க வழி தெரியாமல் இருக்கிறார். அவர் மீண்டும் தவறு செய்யமாட்டார் என நாங்கள் நம்புகிறோம். அவரும் அவரது மகனும் திமுக அரசைத் தொடர்ந்து பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அதிமுக தொண்டர்களைப் புண்படுத்துகிறார்கள் என்றுதானே அர்த்தம்.
திமுகவை எதிர்க்கும் ஒரே சக்தி எடப்பாடி
திமுகவை வீழ்த்த வேண்டிய கடமை இருக்கிறது. ஆனால், அது முடியவில்லை. அதற்குக் காரணம், தமிழக முதல்வரின் வாக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் வாக்கும் ஒரேமாதிரியாக இருக்கிறது. அந்தவகையில் இந்த இயக்கத்தைத் தூண்டிவிட்டு, இதிலிருக்கும் சிலரை திமுகவுக்குள் இழுக்க முயற்சி செய்கிறார். அந்த முயற்சிக்கு ஓ.பன்னீர்செல்வம் பலியாகிறார்.
ஓ.பன்னீர்செல்வம் திமுகவுடன் தொடர்பு இல்லை என நிரூபித்தால், அதிமுகவில் சேர்க்க நினைக்கலாம். ஆனால், தற்போது அது நடைபெற வாய்ப்பு இல்லை. சசிகலா, டி.டி.வி தினகரன் இருவரும் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுக்கொள்ள வேண்டும்; அதேநேரத்தில் அவர்களும் திமுகவுடன் தொடர்பு இல்லாமல் இருக்க வேண்டும். அப்படி இருக்கும்பட்சத்தில், அவர்களை கட்சியில் இணைப்பது தொடர்பாக தலைமை முடிவு செய்யும்.
இன்று எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஆதரிக்கிறார்கள். திமுகவை இன்று எதிர்க்கும் ஒரே சக்தி எடப்பாடிதான் என்பதை எல்லோரும் உணர்ந்திருக்கிறார்கள். ஆகையால், அதிமுகவில் இனி எத்தனைப் பேரைச் சேர்க்க வேண்டும், சேர வேண்டும் என்பதற்கு அவசியமில்லை. அதிமுகவிற்கு யாரும் துணை நிற்க வேண்டிய அவசியமில்லை. போதுமான அளவிற்கு அதிமுக பலத்துடனேயே இருக்கிறது” என்றார்.
ஜெ.பிரகாஷ்
Comments are closed.