பனிவரகில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, தாது உப்புக்கள் மற்றும் மாவுச்சத்து போன்ற ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. முறுக்கு, சீடை, அதிரசம் போன்ற தின்பண்டங்கள் செய்ய உதவும் பனிவரகில் இந்த பனிவரகு காஷ்மீரி புலாவ் செய்து அசத்தலாம். வீட்டிலுள்ளவர்களுக்கு இன்றைய ரம்ஜான் திருநாளன்று விருந்து படைக்கலாம்.
என்ன தேவை?
பனிவரகு – ஒரு கப்
முந்திரி – 10
பாதாம் – 10
திராட்சை – 10
ஆப்பிள் – ஒன்று
பட்டை – சிறிய துண்டு
கிராம்பு, ஏலக்காய் – தலா ஒன்று
கல்கண்டு – 2 டீஸ்பூன்
ரோஸ்வாட்டர் – ஒரு டீஸ்பூன்
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – ஒரு டீஸ்பூன்
பால் – ஒரு கப்
குங்குமப்பூ – சிட்டிகை
எப்படிச் செய்வது?
பனிவரகைக் கழுவி 10 நிமிடம் ஊற விடவும். கனமான அடிப்பகுதியுள்ள பாத்திரத்தில் நெய் சேர்த்து சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் முந்திரி, பாதாம், திராட்சை, பனிவரகு சேர்த்துக் கிளறவும்.
இத்துடன் ஒரு கப் பால், ஒன்றரை கப் நீர், ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு தீயைக் குறைத்து பாத்திரத்தை மூடி வைத்து வேக விடவும் வரகு முக்கால் பதம் வெந்தவுடன் கல்கண்டு மற்றும் ஆப்பிள் துண்டுகள் சேர்க்கவும். பிறகு நன்கு கிளறி ரோஸ் வாட்டர், குங்குமப்பூ சேர்த்துக் கிளறி இறக்கவும், வித்தியாசமான புலாவ் தயார்.