ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிலிருந்து ஏராளமான சிக்கிய யாத்திரீகர்கள், குரு அர்ஜன் தேவ் தியாக தினத்தை முன்னிட்டு நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளுக்கும், மத விழாக்களையும் காண பாகிஸ்தான் செல்வார்கள். இந்த யாத்திரையின் போது பாகிஸ்தானில் பஞ்ச சாஹிப், நங்கனா சாஹிப் மற்றும் கர்தார்பூர் சாஹிப் ஆகிய இடங்களுக்கு யாத்திரீகர்கள் செல்வார்கள். இந்த ஆண்டு இந்த திருவிழா பயணம் ஜூன் 8ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி நிறைவு பெறுகிறது.
இந்நிலையில் இன்று சீக்கியர் யாத்ரீகர்களுக்கு 163 விசாக்களை பாகிஸ்தான் அரசு வழங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சீக்கியர்கள், ஜூன் 16ஆம் தேதியன்று சீக்கிய குரு அர்ஜனின் தியாகத்தை அனுசரிக்கின்றனர். அவரது தியாகம் குரு அர்ஜனின் ‘ஷஹீதி திவாஸ்’ என்று நினைவுகூரப்படுகிறது.
இந்த நாளில், மக்கள் பெரும்பாலும் ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப் படிக்கும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வார்கள் ஆனால் கொரோனா காரணமாக இந்த நிகழ்வு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை. தற்போது கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில் இந்த ஆண்டு இந்த திருவிழா நடைபெறுகிறது.
இதுகுறித்து பாகிஸ்தான் உயர் கமிஷன் பொறுப்பாளர் அப்தாப் ஹசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த வருடம் பாகிஸ்தான் வரும் சிக்கி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், மேலும் அவர்களது பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு கூடுதலாக 163 விசாக்களை பாகிஸ்தான் அரசு சீக்கிய யாத்ரீகர்களுக்கு வழங்குகிறது. 1974ஆம் ஆண்டின் மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதற்கான பாகிஸ்தான்-இந்தியா நெறிமுறையின் கட்டமைப்பின் கீழ், இந்த விசா வழங்கும் முறை உள்ளது.” என்று தெரிவித்தார்.
