ஜம்மு காஷ்மீர் முதல் குஜராத் மாநிலம் வரை ராணுவ நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தீவிர ஆலோசனை நடத்தினார்.
பாகிஸ்தான் ராணுவம், டிரோன்கள்- ஏவுகணைகள் மூலமும் போர் விமானங்கள் மூலமாகவும் இந்திய பகுதிகளில் தொடர்ச்சியாக தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தானின் இந்த தீவிரமான தாக்குதல் நடவடிக்கையை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. அத்துடன் பாகிஸ்தானின் ராணுவ தளங்கள் மீதும் இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை தீவிரம் அடைந்து வரும் நிலையில் பிரதமர் மோடி, டெல்லியில் பல்வேறு கட்ட ஆலோசனைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். கடந்த 4 மணிநேரமாக பிரதமர் மோடி இந்த ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (10.05.2025) புதுதில்லியில், 7, லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜித் தோவல், முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சவுகான், ஆயுதப்படைகளின் தலைவர்கள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் 7, லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சவுகான், ஆயுதப்படைத் தலைவர்கள், மூத்த அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.”