பாகிஸ்தான்: அபாய கட்டத்தில் 1 கோடி 25 லட்சம் பேர்!

Published On:

| By Selvam

Pakistanis below poverty line has increased

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் வறுமை குறியீடு 39.4 சதவிகிதத்தைத் தொட்டு அபாயகரமான அளவை எட்டியுள்ளது என்றும் இதனால் சுமார் 1 கோடியே 25 லட்சம் பேர் பாதிக்கப்பட போகின்றனர் என உலக வங்கி எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக பேசியுள்ள பாகிஸ்தானுக்கான உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் டோபியாஸ் ஹக், “கடந்த ஒரு நிதியாண்டில், பாகிஸ்தானில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

34.2 சதவிகிதமாக இருந்த வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை தற்போது 39.4 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

புதிதாக 1.25 கோடி பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழே வந்துள்ளனர். இதன் மூலம் தற்போது 9.5 கோடி மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே தள்ளப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் பொருளாதார மாடல், வறுமையைக் குறைக்கவில்லை. மாறாக, பாகிஸ்தானின் பொருளாதாரத்திற்கு இணையான பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளைவிட மக்களின் வாழ்க்கைத் தரம் சரிந்துவிட்டது.

பொருளாதாரப் பாதுகாப்புக்கு பாகிஸ்தான் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக, விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

வீண் செலவுகள் நிறுத்தப்பட வேண்டும். பாகிஸ்தானில் மனித வளர்ச்சி குறைந்துள்ளது. நிலையான நிதி நிலை இல்லை. தனியார் துறை அதிகமாக கட்டுப்படுத்தப்படுகிறது.

பாகிஸ்தானில் புதிதாக வரக் கூடிய அரசு விவசாயம் மற்றும் எரிசக்தித் துறையில் சீர்திருத்தத்தை மேற்கொண்டாக வேண்டும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 5 சதவிகிதம் வரியை உயர்த்த வேண்டும்; 2.7 சதவிகிதம் செலவைக் குறைக்க வேண்டும்.

பாகிஸ்தானின் பொருளாதாரம் இன்று மிகவும் கவலை தரக்கூடியதாக இருக்கிறது. இதனால், பொருளாதாரத்தோடு மனித வளர்ச்சியும் கவலை தரக்கூடியதாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது காபந்து அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் பாகிஸ்தானில் வரும் ஜனவரி மாத இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது.

அந்நாட்டுக்கு நிதி உதவி செய்ய பல நாடுகள் முன் வராத காரணத்தால், கடன் உதவி செய்யும் உலக வங்கி, தேசிய நாணய நிதியம் போன்ற நிதி நிறுவனங்கள் பல நிபந்தனைகளை அந்நாட்டுக்கு விதிக்கின்றன.

ஆனால், கடும் விலைவாசி உயர்வாலும், வேலையில்லா திண்டாட்டத்தாலும் மாதாந்திர மின் கட்டணத்தை கூட செலுத்த முடியாமல் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.

தனது நாடு உலகத்திடம் பணத்தை பிச்சை எடுப்பதாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், நாட்டின் முன்னாள் ஜெனரல்கள் மற்றும் நீதிபதிகளை குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜ்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சண்டே ஸ்பெஷல்: எடையைக் குறைத்த பிறகு உணவுக்கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் ஆயுள் முழுக்க அவசியமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share