இந்தியா- பாகிஸ்தான் இடையே புதிய போர்முனையாக அரபிக் கடலில் உள்ள சர் கிரீக் பகுதி உருவெடுத்துள்ளது.
சர் கிரீக் பகுதிக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் நீண்டகாலமாக உரிமை கோருகின்றன. குஜராத்தின் கட்ச் பிராந்தியத்தின் பெரும்பகுதி பாகிஸ்தானுடன் இந்தியாவை தரைவழியாக இணைக்கக் கூடிய ராண் ஆப் கட்ச் எனப்படும் சதுப்பு நிலப் பகுதியாகும்.
இதன் முனைப் பகுதியில் அரபிக் கடலில் இருப்பதுதான் சர் கிரீக். இந்தியா- பாகிஸ்தான் இடையேயான சர்வதேச எல்லைக் கோடாக சர்ச்சைக்குரிய நிலப் பகுதியாக இருக்கிறது.
இந்த பகுதியில் இந்தியாவின் ராணுவ நடவடிக்கை அதிகரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் சர் கிரீக் பகுதியை பாகிஸ்தான் கடற்படை தளபதி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளது இரு நாடுகளிடையேயான பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்தியாவின் மேற்கு பகுதியான ராஜஸ்தானின் ஜெய்சால்மரில், பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் முப்படைகளும் இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் பாகிஸ்தான் கடற்படை தளபதியின் இந்த ஆய்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
