பிரச்சாரத்திற்காக விஜய் திருச்சியை சென்றடைந்த நிலையில், அங்குள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சென்ற காரும் சிக்கியது.
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று (செப்டம்பர் 13) முதல் திருச்சியில் இருந்து தனது அரசியல் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
இதற்காக காலை 9.45 மணியளவில் திருச்சி விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு இன்று காலை முதலே காத்திருந்த தொண்டர்கள் உற்சாக கோஷம் எழுப்பி வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து விஜய் பயணம் மேற்கொண்டுள்ள பிரத்யேக பிரச்சார பேருந்தை சுற்றி, வழிநெடுக தொண்டர்கள் சூழ்ந்து வரும் நிலையில் விமான நிலையத்தில் இருந்து மரக்கடை பகுதிக்கு செல்லக்கூடிய டிவிஎஸ் டோல்கேட் மற்றும் சுப்பிரமணியபுரம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்குள்ள சாலைகளில் வந்த வாகனங்கள் நீண்ட நேரமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளது. குறிப்பாக குன்றக்குடி நோக்கி சென்ற நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் பயணித்த காரும் சிக்கியுள்ளது.
இதற்கிடையே போக்குவரத்து நெரிசல் காரணமாக திருச்சியில் இருந்து புதுக்கோட்டை, ராமேஸ்வரம், ராமநாதபுரம் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
