Pபீட்டா ராதா ராஜன் மீது புகார்!

Published On:

| By Balaji

தமிழர்களின் பாரம்பரியத்தை பாதுகாப்பதற்காக போராட்டத்தில் இறங்கியிருக்கும் தமிழர்களை விமர்சித்த பீட்டா ஆதரவாளரும் நாய் ஆர்வலருமான ராதா ராஜன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் 300 பேருடன் தொடங்கிய போராட்டம் தற்போது, ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்து போராடுகிற அளவுக்கு விரிவடைந்துள்ளது. செயற்கையாலும் இயற்கையாலும் வருகிற தடையைத் தாண்டி போராடி வருகின்றனர். மேலும் ஜல்லிக்கட்டை தடை செய்ய மூல காரணமாக இருந்த பீட்டாவை தடை செய்யவும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க தொண்டு நிறுவனமான பீட்டாவின் ஆதரவாளர் ராதாராஜன், லண்டன் பிபிசி தமிழோசை வானொலிக்கு பேட்டி ஒன்று அளித்தார். அதில், ‘ஜல்லிக்கட்டுக்கு மட்டுமல்லாமல், இலவச உடலுறவு என்று சொன்னாலும்கூட மெரினாவில் 50,000 பேர் கூடுவாங்க’ என்று தமிழ் இளைஞர்களை கொச்சைப்படுத்தியிருந்தார்.

அவருடைய சர்ச்சையான பேச்சு தமிழ்நாட்டு மக்களை சீறி எழவைத்திருக்கிறது. இவருடைய கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனம் எழுந்து வருகிறது. இந்நிலையில், தமிழனின் உண்மையான கலாசாரத்தையும் பண்பாட்டையும் ராதா ராஜன் தெரிந்துகொள்ள வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவர் சென்னை போலீஸ் கமிஷனரிடத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தங்களின் உரிமைக்காக போராடும் தமிழர்களை மிக கேவலமாகப் பேசிய ராதா ராஜன் மீது பெண்களை ஆபாசமாக பேசுதல், பெண்கள் வன்கொடுமை சட்டம் ஆகிய பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share