உயிர் போகும் நிலையில்தான் ஆக்சிஜன் கிடைக்குமா?

Published On:

| By Balaji

டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 25 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 60 நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து என கங்காராம் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இரண்டாம் அலை தொற்றின் வேகமும், நுரையீரல் பாதிப்பும் அதிகளவில் இருப்பதால் மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 26,169 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 306 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையின் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இரண்டு மணி நேரங்களுக்கு மட்டுமே ஆக்சிஜன் இருப்பதால், 60 நோயாளிகள் ஆபத்தான நிலையில் உள்ளனர். வென்டிலேட்டர்கள், பிபாப் கருவிகள் சீராக செயல்படவில்லை. அதனால் உடனடியாக ஆக்சிஜன் விநியோகிக்க வேண்டும் என மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதையடுத்து, காலை 10 மணியளவில் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுபோன்று, டெல்லியில் உள்ள மேக்ஸ் ஸ்மார்ட் மருத்துவமனை, மேக்ஸ் ஹாஸ்பிட்டல் சாக்கெட் ஆகிய மருத்துவமனைகளும் ஒரு மணி நேரத்துக்கும் குறைவான ஆக்சிஜனே கைவசம் இருப்பதாகக் கூறி வந்த நிலையில், அங்கும் ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கடந்த நான்கு நாட்களாக, டெல்லியில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து எச்சரிக்கை மணி எழுப்பி வருகின்றன. ஹரியானா, உத்தரப் பிரதேசத்திலிருந்து தனியார் ஆக்சிஜன் நிலையங்களிலிருந்து ஆக்சிஜனை சீராக வழங்க அனுமதிக்கவில்லை என அம்மாநில அரசுகள் மீது டெல்லி அரசு குற்றம்சாட்டி வருகிறது.

டெல்லியில் ஆக்சிஜன் வழங்குவதற்கான உத்தரவை மத்திய அரசு பின்பற்ற வேண்டும். அதாவது, ஆக்சிஜனை பிச்சை எடுங்கள், திருடுங்கள், எப்படியாவது நோயாளிகளின் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யுங்கள் என டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

**வினிதா**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share