பாமக தலைவர் அன்புமணி தலைமையில் இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக் குழு கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்தும் 3,000-க்கும் அதிகமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் அனுமதியைத் தொடர்ந்து பாமகவின் பொதுக் குழு கூட்டம் அக்கட்சித் தலைவர் அன்புமணி தலைமையில் இன்று ஆகஸ்ட் 9-ந் தேதி நடைபெற்றது.
மாமல்லபுரம் கான்ஃபுளுயன்ஸ் அரங்கத்தில் இன்று காலை 11 மணிக்கு திட்டமிட்டபடி பாமக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. இந்த பொதுக் குழு கூட்டத்துக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை வகித்தார்.
பொதுக்குழு மேடையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும் இருக்கை போடப்பட்டிருந்தது. பொதுக்குழு முடியும் வரை இந்த நாற்காலி அகற்றப்படவில்லை.
பாமக பொதுக்குழு அரங்கத்தில் மொத்தம் 2150 இருக்கைகள் போடப்பட்டிருந்தன. ஆனால் 3,100-க்கும் அதிகமானோர் பொதுக் குழு உறுப்பினர்கள் அரங்கத்துக்கு வந்தனர். இவர்களில் 150க்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். அரங்கத்தில் இடம் கிடைக்காதவர்கள் வெளியே காத்திருந்தனர். பொதுக்குழுவில் பங்கேற்ற அனைவரும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
பாமக பொதுக்குழு நடைபெற்ற அரங்கத்தில் இருந்து சுமார் 3 கிமீ தொலைவுக்கு சாலையின் இரு பக்கமும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. 15 அடி உயரத்தில் 600-க்கும் மேற்பட்ட பாமக கொடிக் கம்பங்களும் வைக்கப்பட்டிருந்தன.
இப்பொதுக் குழுவுக்காக 200 கார்கள், 7 வேன்கள் மற்றும் 3 பேருந்துகளில் இருந்து தமிழ்நாடு முழுவதும் இருந்தும் பாமக நிர்வாகிகள் வருகை தந்தனர்.
பொதுக்குழுவில் பங்கேற்றவர்களுக்கு அசத்தலான அசைவ விருந்து பரிமாறப்பட்டது. சைவ உணவும் தனியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாமக நிர்வாகிகளிடம் பேசிய அன்புமணி, எனக்கு உங்களைத் தவிர வேறு யாருமே இல்லை..நீங்கள்தான் எனக்கு எல்லாமே.. உங்களுடன் நானும் சாப்பிடுகிறேன் என உருக்கமாக பேசியது பாமகவினரை நெகிழ வைத்தது.
