தமிழ்நாடு காவல்துறையில் சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் ‘ஆடர்லி’ காவலர்கள் முறையை உடனடியாக ரத்து செய்ய பொறுப்பு டிஜிபி அபய்குமார் சிங் உத்தரவிட்டுள்ளார்.
காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் காவலர்களை உதவியாளர்களாக பயன்படுத்துவது நீண்டகாலமாக நடைமுறையில் இருந்தது. இப்பணியில் ஈடுபடுவோர் ஆடர்லி என அழைக்கப்பட்டனர்.
1979-ம் ஆண்டு ஆடர்லி முறை ஒழிக்கப்பட்டாலும் நடைமுறையில் நீடித்தும் வந்தது. காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் சமையலர்கள், துப்புரவாளர்கள், தோட்டக்காரர்கள் போன்ற பணிகளுக்குக் காவலர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தனர்.
இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கும் போனது. அப்போது, சட்டவிரோதமாக காவலர்களை ஆடர்லிகளாகப் பயன்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் புதிய பொறுப்பு டிஜிபி அபய்குமார் சிங் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஆடர்லிகளாக உள்ள காவலர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
