வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, கோவை, நீலகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று (ஜூலை 18) மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. orange alert for coimbatore and nilagiri
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் மீது ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்று வீசுவதால் வேக மாறுபாடு காணப்படுகிறது. இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் கோவை நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி, செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, ஆகிய 10 மாவட்டங்களில் சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 10 மணி வரை 7 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி, நெல்லை, தென்காசி, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
