சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (டிசம்பர் 2) கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
வங்க கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக தலைநகர் சென்னையில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நேற்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டிருப்பதால் இன்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் 21 செ.மீ க்கு அதிகமான மழை பொழிய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுத்தது. பின்னர் ஒரு மணி நேரத்தில் திருவள்ளூருக்கு கொடுத்த சிவப்பு எச்சரிக்கையை ஒரு மணி நேரத்தில் வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றது.
மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 12 முதல் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வேலூர் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள நீலகிரி, கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சேலம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
