நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வுமையம் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருமழை தீவிரமடைந்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வருகிற நவம்பர். 26 ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழையும் தென் மாவட்டங்களில் கனமழையும் பெய்து வருகிறது.
இந்நிலையில் இன்று(நவம்பர் 23) நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர். நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர் மாவட்டங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நாளை (நவம்பர் 24) நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர். நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதற்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தை பொருத்தவரை கடந்த மூன்று தினங்களாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மாவட்டத்தின் பிரதானமான பாபநாசம் அணை பகுதியில் கனமழை பெய்து வருவதால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது . பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 6178 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 6.5 அடி உயர்ந்துள்ளது . மற்றொரு பிரதான அணையான மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 99.45 அடியாக உள்ளது அந்த அணைக்கு 2975 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் சேரன்மகாதேவி திருநெல்வேலி பாளையங்கோட்டை கடனாநதி உள்ளிட்ட இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது.
