அதிமுக கொடியை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் காரில் இருந்து கட்சிக் கொடி அகற்றப்பட்டுள்ளது.
அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு மீது கடந்த நவம்பர் 7 ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேர் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் தனி நீதிபதி சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இரு நீதிபதிகள் அமர்வு முன்பு நாளை (நவம்பர் 10) விசாரணைக்கு வர உள்ளது.
இதனிடையே கடந்த வாரம் சிங்கப்பூர் சென்றிருந்த ஓபிஎஸ் நேற்று இரவு சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் திரண்டிருந்த அவரது ஆதரவாளர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து ஓபிஎஸ் தனது காரில் ஏறி கிரீன்வேல்ஸ் சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது வழக்கமாக ஒபிஎஸ் செல்லும் காரின் முன்பகுதியில் பறக்கும் அதிமுக கொடி மிஸ் ஆகியிருந்தது. மேலும் ஓபிஎஸ் வழக்கமாக அணியும் கருப்பு, வெள்ளை, சிவப்பு அதிமுக கரை வேட்டிக்கு பதிலாக பச்சை நிற பார்டர் இருந்த வேட்டியை அணிந்து வந்திருந்தார்.
தனது அரசியல் வாழ்க்கையில் முதல் முறையாக கட்சிக் கொடி இல்லாமல் ஓபிஎஸ் பயணித்துள்ளார் என்று அவரது ஆதரவாளர்கள் அப்செட்டாக பேசிக் கொண்டிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
கார்த்தியின் ‘ஜப்பான்’… இணையத்தில் வெளியிட தடை: உயர்நீதிமன்றம்!