இரு மாதங்களில் எங்கிருப்பீர்கள் எனத் தெரியும்: ஈபிஎஸ்ஸுக்கு சவால்விட்ட கோவை செல்வராஜ்

Published On:

| By Guru Krishna Hari

அதிமுக அலுவலகத்தில் நடந்த சம்பவங்களுக்கு ஓபிஎஸ் தான் காரணம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் குற்றம்சாட்டிய நிலையில், அதற்குப் பன்னீர் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு நேற்று நடைபெற்றது. இதில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுபோன்று பன்னீர்செல்வம் தலைமை அலுவலகத்துக்குச் சென்று கைப்பற்றினார். அங்கு இருவரது ஆதரவாளர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. அதில் ஒருவருக்குக் கத்திக்குத்தி ஏற்பட்டது. 59 பேர் காயமடைந்தனர். 55 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். 4 பேர் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 14 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக ராயப்பேட்டை போலீஸார் ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று (ஜூலை 11) நடந்த நிகழ்ச்சிகள் தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அவர் கூறுகையில், “ஈபிஎஸ் மற்றும் கே.பி.முனுசாமி கட்சியிலிருந்து நீக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். சோடா பாட்டில், தடி, கத்தி, அரிவாள், பெட்ரோல் குண்டு எல்லாம் எடுத்துக்கொண்டு கடந்த ஒரு வார காலமாகக் கட்சி அலுவலகத்தில் ரவுடிகளையும், வன்முறையாளர்களையும் இவர்கள் வைத்துக்கொண்டு போட்ட ஆட்டமெல்லாம் மக்களுக்குத் தெரியும்.

ஓபிஎஸ் அடியாட்களை அழைத்து வந்ததாகச் சொல்கிறார்கள். அப்படி யாரையும் அவர் அழைத்துச் செல்லவில்லை. ஈபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் இரண்டு மூன்று பேர் அடியாட்களை அழைத்து வந்து அங்கிருந்தார்கள். ஓபிஎஸ்ஸையும், அவரது ஆதரவாளர்களையும் தாக்குவதற்காக ஆட்டோவில் செங்கல், கற்கள் எல்லாவற்றையும் எடுத்து வந்து வைத்திருந்தனர்.

இதில் முன்னாள் மாவட்டச் செயலாளர் சைதை பாபு மோசமான சூழ்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் ஈபிஎஸ் தரப்பில் 14 பேர் போலியாக பேண்டேஜுகளை போட்டுக்கொண்டு நாடகமாடுகின்றனர்.

ஒட்டுமொத்த தொண்டர்களும் ஓபிஎஸ்ஸை தான் பாராட்டுகிறார்கள். நடந்து முடிந்த பொதுக்குழுவில் 700 பேர்தான் கலந்துகொண்டிருக்கின்றனர். மீதமுள்ள 1,700 பேர் இந்த கூட்டத்துக்கு வரவில்லை. போலியான அடையாள அட்டை கொடுத்து ரவுடிகளை வைத்து பொதுக்குழுவை நடத்தியிருக்கின்றனர்.

தினசரி 200, 300 பொதுக்குழு உறுப்பினர்கள் ஓபிஎஸ்ஸிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள், கட்சி தான் எங்களுக்கு முக்கியம் என்று சொல்கிறார்கள். பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் ஓபிஎஸ் பின்னால்தான் இருக்கிறார்கள். பொதுக்குழுவுக்குச் சென்ற மாவட்டச் செயலாளர்கள் பலர் மனசாட்சியோடு செல்லவில்லை. நிர்ப்பந்தத்தின் பேரில் தான் சென்றனர்.

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது கொடநாடு கொலை, கொள்ளை நடந்தது. இந்த வழக்கில் முறையான விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தண்டிக்காததற்குக் காரணம், இவர்களுக்கு யார் அந்த குற்றவாளி எனத் தெரியும். குற்றவாளிக் கூண்டில் ஏற வேண்டிய நிலை வந்துவிடுமோ என்ற பயத்தில் இந்தக் கட்சியைக் கையகப்படுத்தப் பார்க்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. நீதிமன்றம் இருக்கிறது. இவர்கள் செல்கிற நீதிமன்றத்தை விட மக்கள் நீதிமன்றம் இருக்கிறது.

ரவுடிகளையும், பணத்தையும் வைத்துக் கொண்டு கட்சியை நடத்துகிறார். இந்த கட்சியைக் காப்பாற்ற மூன்று முறை முதல்வராக இருந்த ஓபிஎஸ் இருக்கிறார். எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் பன்னீர்செல்வம் தான். எடப்பாடி பழனிசாமி அல்ல.

காலில் விழுந்து பதவியை வாங்கி, ஓபிஎஸ்ஸை வைத்து நான்கரை ஆண்டுக் காலமாக ஆட்சியை நடத்தி பணம் சம்பாதித்துவிட்டு இன்றைக்கு இப்படி திமிராகச் செயல்படுகிறார். இவர்களை யாரும் காப்பாற்ற முடியாது. விரைவில் சிறைக்குச் செல்வார்கள்.

தர்மம் தான் வெல்லும் என்று ஈபிஎஸ் சொல்கிறார். இரண்டு மாதங்கள் போகட்டும்… நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று பார்ப்போம். 28 ஆண்டுகள் பொதுச்செயலாளராகப் பதவி வகித்த ஜெயலலிதா இருந்த இடத்துக்கு யாரும் வரக்கூடாது என்று 2017இல் சொன்னோம். ஆனால் நிரந்தரப் பொதுச் செயலாளர் பதவியை ரத்து செய்துவிட்டு அம்மாவுக்கே துரோகம் செய்துள்ளார். அவருக்கு வேண்டியது எல்லாம் பணம், பதவி. அதற்காக யாரை வேண்டுமானால் கொலை செய்யக் கூட தயங்கமாட்டார்” என்று காட்டமாகப் பேசினார்.

-பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share