“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி” – ஓபிஎஸ்

Published On:

| By Selvam

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் இன்று (ஜனவரி 21) செய்தியாளர்களை சந்தித்தார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, “ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிடுகிறோம். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எங்களுக்கு முழு உரிமை உள்ளது.

இரட்டை இலை சின்னத்திற்கான உரிமை கோரி ஏ மற்றும் பி படிவத்தில் நான் கையெழுத்திடுவேன். எடப்பாடி பழனிசாமி கையெழுத்திடுவது அவரது விருப்பம். உள்ளாட்சி தேர்தலின் போது நான் ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்து போட்டேன்.

எடப்பாடி பழனிசாமி தான் கையெழுத்து போடவில்லை. இதனால் இரட்டை இலை சின்னத்தில் கழக தொண்டர்கள் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டது.

கடந்த சட்டமன்ற தேர்தலை போல பாஜக, பாமக, புரட்சி பாரதம் கட்சிகளிடம் அவர்களது ஆதரவை கேட்க உள்ளோம்.

பாஜக ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தால் எங்கள் ஆதரவை அவர்களுக்கு தெரிவிப்போம். இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கு எந்த காலத்திலும் பன்னீர் செல்வம் தடையாக இருக்க மாட்டான்.

வருகின்ற 23-ஆம் தேதி நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் குறித்து விவாதிப்போம். அதிமுக-வில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது தான் எனது விருப்பம்.

இரட்டை இலை எங்களுக்கு கிடைக்கவில்லை என்றால், தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் தான் போட்டியிடுவோம்.” என்று அவர் தெரிவித்தார்.

செல்வம்

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா:பனானா பான் கேக்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share