மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் விமர்சனங்களை அவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
மாநிலங்களவையின் தலைவராக முதல் முறையாக இன்று டிசம்பர் 1-ந் தேதி துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்று வழிநடத்தினார். பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் சிபிஆருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது, முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ராஜினாமா குறித்து மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் கேள்வி எழுப்ப சபையில் கடும் அமளி ஏற்பட்டது. இதனால் பிரதமர் மோடி, சபையை விட்டு வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்டவை தொடர்பான ஒத்திவைப்பு தீர்மானங்களை ஏற்று விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பிக்கள் முழக்கமிட்டனர்.
அப்போது, நாட்டில் ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது என மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டினார். ஆனால், மல்லிகார்ஜூன கார்கேவின் இந்த விமர்சனங்கள் எதுவும் சபை குறிப்பில் இடம்பெறாது என சபை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
