பாமக (செயல்) தலைவர் அன்புமணி தமது சுற்றுப் பயணத்தில் பாமக பெயர், கட்சி கொடி ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரி தமிழக டிஜிபியிடம் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மனு அளித்துள்ளார். Anbumani Ramadoss PMK
பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையேயான மோதல் தொடருகிறது. அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேர் அண்மையில் பாமகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். முன்னதாக அன்புமணி மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பாமக நிறுவனர் ராமதாஸுக்கு அதிகாரம் வழங்கியது அக்கட்சியின் செயற்குழு.

இந்த நிலையில், “தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்” என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் ஜூலை 25-ந் தேதி முதல் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார் அன்புமணி. இந்த பயணத்தின் போது பாமக தொண்டர்களை அவர் சந்திக்கிறார்.
100 நாட்கள் நடைபெற உள்ள இந்த பயணத்தில், பாமகவின் பெயர் மற்றும் கொடியை அன்புமணி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று தமிழக டிஜிபியிடம் ராமதாஸ் மனு அளித்துள்ளார்.
இந்த மனுவில், பாமகவின் நிறுவனர் ராமதாஸ் அனுமதி இல்லாமல் பாமகவினரை அன்புமணி சந்திக்க கூடாது; பாமக கட்சி பெயர் மற்றும் கொடியையும் அன்புமணி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
