100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். முன்னதாக மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டதால் அவை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்ற மக்களவையில், 100 நாள் வேலைத் திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கி புதிய மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. இம்மசோதாவை அறிமுக நிலையிலேயே எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள் கடுமையாக எதிர்த்து முழக்கமிட்டனர்.
இம்மசோதா மீது பேசிய திமுக மக்களவைக் குழு தலைவர் டிஆர் பாலு, மகாத்மா காந்தியை கேலிக்குரியவராக்கிவிட்டது மத்திய அரசு. மகாத்மா காந்தி மீதான வெறுப்பை காட்டுகிறது மத்திய அரசு என சாடினார்.
வயநாடு தொகுதி எம்.பி.யான காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் இம்மசோதாவை கடுமையாக விமர்சித்து பேசினார். இதனால் மக்களவையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவை நடவடிக்கைகளை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா. மக்களவையை விட்டு வெளியே வந்த எதிர்க்கட்சி எம்.பிக்கள் அனைவரும் நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
