தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் என தேர்தலை எதிர்கொள்ளும் 5 மாநிலங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று கருத்துகணிப்புகளை நடத்தியிருக்கிறது.
INDIAN POLITICAL DEMOCRATIC STRATEGIES என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய 2 மாநிலங்களில் காங்கிரஸுக்கும், ராஜஸ்தானில் பாஜகவுக்கும், தெலங்கானாவில் சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ் கட்சிக்கும், மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சிக்கும் வெற்றி வாய்ப்புகள் இருப்பதாக முடிவுகள் தெரிவிக்கின்றன.
மத்தியப் பிரதேசம்

மத்தியப் பிரதேசத்தை பொறுத்தவரை வரும் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பிருப்பதாகவும் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 105-122 (45.49 %) இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று இந்த கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பாஜக 95-110 (41.88 %) இடங்களிலும், பகுஜன் சமாஜ்வாதி கட்சி 2 – 3 (5.73 %), மற்றக் கட்சிகள் 3 – 5 (6.90 %) இடங்களை பிடிக்கும்.
ராஜஸ்தான்

200 தொகுதிகளைக் கொண்ட, காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் ராஜஸ்தானில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று இந்த கருத்து கணிப்புகள் காட்டுகின்றன. அதன்படி பாஜக 117 – 139 (57.59 %) இடங்களையும் காங்கிரஸ் 60 – 75(35.66 %), மற்ற கட்சிகள் 5 – 8 (6.75 %) இடங்களை பிடிக்கும்.
மிசோரம்

40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மிசோரத்தில் மாநில கட்சியான மிசோ தேசிய முன்னணி 11 – 20 (37.70 %) இடங்களையும், காங்கிரஸ் 10 – 12 (27.68 %) இடங்களையும், சோரம் மக்கள் இயக்க கட்சி 7 – 10 (26.86 %) இடங்களையும், மற்ற கட்சிகள் 1- 2 (7.76 %) இடங்களையும் பிடிக்கும்.
தெலங்கானா

119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவில் முதல்வர் சந்திரகேகராவின் பாரத ராஷ்டிர சமிதி கட்சி 45 – 59 (45.51 %), காங்கிரஸ் 40 – 50 (40.29 %), பாஜக 3 – 7 (11.69 %), மற்ற கட்சிகள் 0 – 2 (2.51 %) இடங்களை பிடிக்கும்.
சத்தீஸ்கர்

காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் 42 – 45 (43.88 %) இடங்களையும், பாஜக 37 – 43 (41.40 %), மற்ற கட்சிகள் 2 – 8 (14.72 %) இடங்களையும் பிடிக்கும்.

இந்த கருத்து கணிப்பு ஆய்வுகளை நடத்திய INDIAN POLITICAL DEMOCRATIC STRATEGIES நிறுவனத்தின் தலைவர் திருநாவுக்கரசு மின்னம்பலத்திடம் கூறுகையில், “5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதால் அந்தந்த மாநிலங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தினோம். அதோடு ஏற்கனவே தொகுதி வாரியான தகவல்களையும் திரட்டி வைத்திருந்தோம். அந்தந்த மாநில பத்திரிகையாளர்களையும் சந்தித்து பேசியும் தகவல்களை பெற்றோம். அதனடிப்படையில் இந்த கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
இதுபோன்ற தேர்தல் கருத்து கணிப்புகளை வேறு வேறு மாநிலங்களில் உள்ள நிறுவனங்கள் ஆய்வு நடத்தி வெளியிடும். இந்த முறை தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று மற்ற மாநில தேர்தல் கருத்துகணிப்புகளை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வேந்தன், பிரியா
பொன்முடி மீதான சூமோட்டோ வழக்கு ஒத்திவைப்பு!
செந்தில்பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
