Operation Sindoor ராணுவ நடவடிக்கை தொடர்பாக மக்களவையில் நள்ளிரவை தாண்டியும் இன்று ஜூலை 29-ந் தேதி அதிகாலை 0.51 மணி வரை விவாதம் நடைபெற்றது.
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக Operation Sindoor ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.
இதனையடுத்து ஜூலை 28-ந் தேதி பிற்பகல் 3 மணிக்கு மக்களவையில் Operation Sindoor குறித்த விவாதம் தொடங்கியது. இந்த விவாத்தின் தொடக்கத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். இவ்விவாதத்தில் அனைத்து கட்சி எம்பிக்களும் பங்கேற்று கருத்துகளை முன்வைத்தனர். இந்த விவாதத்தின் இடையே மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் குறுக்கிட்டுப் பேசினர்.
தமிழக எம்பிக்கள் சு.வெங்கடேசன், தொல்.திருமாவளவன், துரை வைகோ உள்ளிட்டோர் இரவு 9 மணிக்கு மேல் பேசினர். இந்த விவாதம் நள்ளிரவு 12 மணியை தாண்டியும் நடைபெற்றது. இன்று ஜூலை 29-ந் தேதி அதிகாலை 0.51 மணி வரை விவாதம் நடந்தது.
மக்களவையில் இன்று ஜூலை 29-ந் தேதி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு எம்பி பிரியங்கா காந்தி ஆகியோர் பேச உள்ளனர். இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் பேசுவார். பின்னர் பிரதமர் மோடி பதிலளிப்பார்.
