பாகிஸ்தானுக்கு எதிரான Operation Sindoor ராணுவ நடவடிக்கை தொடர்பாக இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, கத்தார் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விளக்கம் தருவதற்காக அனைத்து கட்சிகளின் எம்பிக்களின் குழுக்களை அனுப்புகிறது மத்திய அரசு.
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் படுகொலைத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக Operation Sindoor ராணுவ நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலாக இந்தியாவின் எல்லை மாநிலங்களை இலக்கு வைத்து பாகிஸ்தான் தாக்குதல் மேற்கொண்டது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. அமெரிக்காவின் தலையீட்டால் இருநாடுகளும் தாக்குதல்களை நிறுத்தி உள்ளன.
இந்நிலையில் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு செயல்கள், ஜம்மு காஷ்மீர் பஹல்காம் படுகொலை, Operation Sindoor ராணுவ நடவடிக்கை தொடர்பாக வெளிநாடுகளுக்கு விளக்கம் தருவதற்காக அனைத்து கட்சி எம்பிக்கள் அடங்கிய குழுக்களை அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒருங்கிணைப்பு பணிகளை மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ மேற்கொண்டுள்ளார். அனைத்து கட்சி எம்பிக்கள் குழுக்களின் பயணம் மே 22-ந் தேதிக்குப் பிறகு தொடங்கும்.
இந்த குழுவினர் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று அந்நாட்டின் தலைவர்களைச் சந்தித்து Operation Sindoor ராணுவ நடவடிக்கை குறித்து விளக்கம் தர இருக்கின்றன. இந்த குழுக்களுக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சீனியர் எம்பிக்கள் தலைமை தாங்க இருக்கின்றனர் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.