பாகிஸ்தானுக்கு எதிரான Operation Sindoor ராணுவ நடவடிக்கை தொடர்பாக விவரிக்க வெளிநாடுகளுக்கு எம்பிக்கள் குழுக்கள் செல்லும் விவகாரத்தில் மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் அதிருப்தியில் இருக்கிறது.
மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களுக்கு எதிரான இந்தியாவின் தொடர் போராட்டத்தின் பின்னணியில், அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய ஏழு குழுக்கள் ஐ நா பாதுகாப்புக்கு கவுன்சிலில் உள்ள உறுப்பு நாடுகள் உட்பட முக்கியமான நட்பு நாடுகளுக்கு இம்மாத இறுதியில் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் புகழ்பெற்ற தூதரக அதிகாரிகள் ஒவ்வொரு குழுவிலும் இடம்பெறுவார்கள்.
பின்வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பிரதிதிதிகள் குழுக்களை வழிநடத்துவார்கள்:
சசி தரூர், இந்திய காங்கிரஸ் கட்சி
ரவிசங்கர் பிரசாத், பாஜக
சஞ்சய் குமார் ஜா, ஜே.டி.யு
பைஜயந்த் பாண்டா, பாஜக
கனிமொழி கருணாநிதி, தி.மு.க
சுப்ரியா சுலே, என்சிபி
ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா என தெரிவித்திருந்தது.
சசி தரூர் பெயரை பரிந்துரைக்கவில்லையே- காங்கிரஸ்
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ, காங்கிரஸ் தலைமையை தொடர்பு கொண்டு வெளிநாடு செல்லும் குழுக்களில் இடம் பெற வேண்டிய எம்பிக்கள் பெயரை பரிந்துரைக்க கேட்டுக் கொண்டார். இதனை ஏற்று காங்கிரஸ் தலைமையும்
ஆனந்த் சர்மா, கவுரவ் கோகாய், சயீத் நசீர் ஹுசைன், அம்ரீந்தர் சிங் பெயர்களை பரிந்துரைத்தது. இதில் சசி தரூர் பெயரே இடம் பெறவில்லை. ஆனால் சசி தரூரை ஒரு குழுவின் தலைவராக மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது எப்படி சரியாகும்? என்கிறார்.
