சென்னை குப்பை லாரி நேர வழக்கு: தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

Published On:

| By Prakash

’சென்னையில் குப்பை லாரிகளை இயக்க நேர நிர்ணயம் செய்ய முடியாது’ எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகரில் குப்பைகளைச் சேகரித்து, குப்பைக் கிடங்குகளுக்குக் கொண்டுசெல்ல லாரிகள் இயக்கப்படுகின்றன. இந்த குப்பை லாரிகள், காலை நேரங்களில் இயக்கப்படுவதால், பள்ளி மாணவ – மாணவியரும், வேலைக்கு செல்வோரும் பாதிக்கப்படுகின்றனர்.

ADVERTISEMENT

இதனால், காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் குப்பை லாரிகளை இயக்க சென்னை மாநகராட்சிக்கு தடை விதிக்க கோரி கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், ’பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் நேரங்களில் குப்பை லாரிகளை சாலைகளில் நிறுத்தி குப்பைகளை எடுப்பதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. குப்பைகள் மீது வலையைப் போர்த்தி செல்லாததால் காற்றில் அவை பறந்து சாலைகளில் கொட்டுகிறது.

ADVERTISEMENT

இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுவதுடன், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. வெளிநாடுகளில் இரவு நேரங்களில் குப்பை லாரிகள் இயக்கப்படுவதைப்போல் சென்னையிலும் இரவு நேரங்களில் குப்பை லாரிகளை இயக்கினால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இருக்காது.

எனவே, சென்னையில் பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் நேரங்களில் குப்பை லாரிகளை இயக்க மாநகராட்சிக்கு தடை விதிக்க வேண்டும்’ என அதில் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (டிசம்பர் 20) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், ’குப்பை லாரிகளை இந்த நேரத்தில்தான் இயக்க வேண்டும் என்று நேர நிர்ணயம் செய்ய முடியாது’ என்று தெரிவித்து இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ஜெ.பிரகாஷ்

மன்னிப்பா? மறுத்த கார்கே : பாஜக கடும் அமளி!

ரபேல் வாட்ச் ரசீது அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி மீண்டும் கெடு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share