தேனி மக்களவை தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் பெற்ற வெற்றி செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜூலை 6) தீர்ப்பு வழங்கியுள்ளது.
2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் ஓ.பி.ரவீந்திரநாத் போட்டியிட்டு தனக்கு எதிராக போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை விட 76,319 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி அந்த தொகுதி வாக்காளர் மிலானி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மிலானிக்காக வழக்கறிஞர் வி.அருண் ஆஜராகி வாதாடினார்.
”ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ரவீந்திரநாத் தேர்தலில் வெற்றி பெற்றார். பணப் பட்டுவாடா அதிகம் நடப்பதாக வேலூர் தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் தேனி தொகுதியிலும் அதிக பணப்பட்டுவாடா நடந்தும் தேர்தல் தள்ளிவைக்கப்படவில்லை” என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் மிலானி தொடர்ந்த வழக்கை ஏற்கக் கூடாது என்று ரவீந்திரநாத் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிராகரிப்பு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தொடர்ந்து ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை கடந்த ஜூன் 28 ஆம் நடைபெற்றது. அப்போது ரவீந்திரநாத் விசாரணைக்கு நேரில் ஆஜரானார்.
அப்போது ரவீந்திரநாத், அவரது தரப்பு வழக்கறிஞர் ஸ்ரீராம் கேட்ட கேள்விகளுக்கு சாட்சி கூண்டில் ஏறி வாக்குமூலம் அளித்தார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வி.அருண் நடத்திய குறுக்கு விசாரணைக்கும் ரவீந்திரநாத் பதிலளித்தார்.
பின்னர், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது. அதில்தான் ஓபி.ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என்று அதிரடியாக கூறியுள்ளது.
மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மோனிஷா
