இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஊட்டியில் நடைபெற இருக்கும் கோடை விழாவில் மலர் கண்காட்சி, பழக் கண்காட்சி, காய்கறி கண்காட்சி போன்ற பல்வேறு வகையான கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.
இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பிரதேசமான நீலகிரியின் இயற்கை எழிலைக் கண்டு ரசிக்கவும் அங்கு நிலவும் இதமான காலநிலை அனுபவிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஊட்டிக்கு வந்து செல்கின்றனர்.
கொதிக்கும் கோடையில் குளிர்ச்சியையும் புத்துணர்வையும் தேடி வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுகிறது. கோடை விழாவில் மலர் கண்காட்சி, பழக் கண்காட்சி, காய்கறி கண்காட்சி போன்ற பல்வேறு வகையான கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நீலகிரியில் கோடை விழா ரத்து செய்யப்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நடப்பு ஆண்டில் நீலகிரியில் கோடை விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் அரசுத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் கோடை விழா நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
11ஆவது காய்கறி கண்காட்சி மே மாதம் 7, 8 ஆகிய தேதிகளில் கோத்தகிரி நேரு பூங்காவில் நடைபெற இருக்கிறது.
9ஆவது வாசனை திரவிய கண்காட்சி 13, 14, 15 ஆகிய தேதிகளில் கூடலூரில் நடைபெற இருக்கிறது.
17ஆவது ரோஜா கண்காட்சி 14, 15 ஆகிய தேதிகளில் ஊட்டியில் உள்ள ரோஜா பூங்காவில் நடைபெற இருக்கிறது.
கோடை விழாவின் மிக முக்கிய நிகழ்வான 124ஆவது மலர் கண்காட்சி 20, 21, 22, 23, 24 ஆகிய தேதிகளில் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற இருக்கிறது.
62ஆவது பழக் கண்காட்சி 28, 29 ஆகிய தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடைபெற இருக்கிறது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற இருக்கும் நீலகிரி கோடை விழாவுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தமிழக கவர்னர் மற்றும் முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளும் மும்முரமாகச் செய்யப்பட்டு வருகின்றன.
**-ராஜ்**
