ரசிகர்கள் தீவிரமாக எதிர்பார்த்த ’கூலி’ பட ட்ரெய்லரில் பல ஆச்சர்யப்படும் விஷயங்கள் இருக்கின்றன. நாகார்ஜுனா வில்லனாக நடித்திருப்பது, 80களில் இருந்த ரஜினியை ஒரு ஷாட்டில் காண்பித்திருப்பது, சத்யராஜ் உட்படப் பல நட்சத்திரங்களுக்கு முக்கியத்துவம் தந்திருப்பதாகத் தோற்றமளிப்பது எனத் தொடரும் ஆச்சர்யங்களில் ஒன்று ’கேமியோ’வாக அமீர்கான் தலைகாட்டியிருப்பது.
கிட்டத்தட்ட அதே கெட்டப்பில் ’கூலி’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிலும் அவர் கலந்துகொண்டார். இன்னும் சில நாட்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அது ‘வைரல்’ வீடியோவாக உலா வருவது உறுதி.
சமீபத்தில் குஜராத்தின் புஜ் பகுதி அருகிலுள்ள கொடாய் எனும் கிராமத்தில் அமீர்கான் நடித்த ‘சிதாரே ஜமீன் பர்’ படம் திரையிடப்பட்டது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதிகளில்தான் ‘லகான்’ படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது.
அந்த திரையிடலில் பங்கேற்கச் சென்ற அமீர்கான், ’லகான்’ நினைவுகளைப் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல், தனது சமீபத்திய ‘ஹிட்’டான ‘சிதாரே ஜமீன் பர்’ படத்தை ஏன் இங்கு திரையிட விரும்பினேன் என்பதற்கான காரணத்தையும் கூறியிருக்கிறார். அதற்காக அவர் சொன்ன பதில் திரைத்துறையினரையே யோசிக்க வைத்திருக்கிறது.

“இந்த பகுதியில தியேட்டர்கள் எண்ணிக்கை ரொம்ப குறைவு. அதனால என்னோட படத்தை இந்த மாதிரியான கிராமங்கள்ல வாழ்றவங்களும் பார்க்கணும்னு ஆசைப்பட்டேன். அதனாலதான், ‘பே பெர் வியூ’ முறையில என்னோட யூடியூப் சேனல்ல வெளியிட்டிருக்கேன். இந்த படத்தை நிறைய பேர் பார்க்கணும்கறதுதான் என்னோட ஆசை.
எதுக்கு இதைச் சொல்றேன்னா, நம்ம நாட்டுல 2-3 சதவிகிதம் பேர் தான் தியேட்டர்ல போய் படம் பார்க்கிறாங்க. பெரிய ஹிட்டான படங்களோட நிலைமையே இதுதான். அப்படின்னா மத்தவங்க எல்லாம் எப்படி படம் பார்க்குறாங்கன்னு கேள்வி எழுவது இயல்பு. நாட்டுல பல பகுதியில போதுமான தியேட்டர்களே இல்லை என்பதுதான் உண்மையான நிலைமை. அவங்களை சென்றடைய இதுதான் எளிதான வழி.
ஒவ்வொரு கிராமத்துலயும் ஒவ்வொரு வீட்லயும் என்னோட படம் பார்க்கப்படணும்னு விரும்புறேன். அதுக்காகத்தான் இந்த முயற்சி” என்றிருக்கிறார் அமீர்கான்.
தான் கௌரவ வேடத்தில் நடித்த தமிழ் பட விழாவொன்றில் அதே கெட்டப்பில் தோன்றி கைத்தட்டல்களை அள்ளும் அளவுக்குச் சிந்திக்கிற அமீர்கான், ஒரு படத்தின் முழுமையான வெற்றியை எட்ட இப்படியெல்லாம் யோசிக்காமல் போனால்தான் ஆச்சர்யப்பட வேண்டும்..!
