ஊரடங்கால் வெறிச்சோடிய தடுப்பூசி மையங்கள்!

Published On:

| By Balaji

நேற்று முழு ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் 10,000 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 15,659 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 4,206 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். நேற்று கொரோனாவால் 82 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 11,065 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் சென்றுகொண்டிருப்பதால், அதைக் கட்டுப்படுத்த பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நேற்று மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இருப்பினும், மருத்துவத் தேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்ததால், நேற்று அனைத்து தடுப்பூசி மையங்களும் திறந்து வைக்கப்பட்டிருந்தன.

ADVERTISEMENT

தமிழகத்தில் உள்ள 3,798 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. ஊரடங்கு காரணமாக பல தடுப்பூசி மையங்களில் வழக்கத்தைவிட தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்தது. வழக்கமாக தமிழகத்தில் நாளொன்றுக்கு ஒரு லட்சம் பேர் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. நேற்று (ஏப்ரல் 25) 10,553 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

இணை நோய் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட 5,478 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 3,798 முதியவர்களுக்கும், சுகாதாரப்பணியாளர்கள் 425 பேருக்கும், முன்கள பணியாளர்கள் 852 பேருக்கும் நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 52 லட்சத்து 62,373 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில் 45 லட்சம் பேருக்கு முதல் டோஸும், 7 லட்சம் பேருக்கு இரண்டாவது டோஸும் போடப்பட்டுள்ளது. மத்திய அரசு, தமிழகத்துக்கு இதுவரை 69.85 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இந்தியாவில் இதுவரை 14 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 24 அன்று மட்டும் நாடு முழுவதும் 25,36,612 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

**வினிதா**

ADVERTISEMENT

.

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share