சென்னையில் ஜனவரி மாதம் நடைபெறவிருந்த 45வது புத்தக கண்காட்சி கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்து வருவதால், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. இதனால், பிப்ரவரி 16ஆம் தேதி முதல் மார்ச் 6ஆம் தேதிவரை புத்தக கண்காட்சியை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது.
கொரோனா காலம் என்பதால் புத்தக கண்காட்சியில் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும், கூட்டநெரிசலைத் தவிர்க்க ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி நுழைவுச் சீட்டு கொடுக்கலாம் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் நாளை(பிப்ரவரி 6) முதல் பபாசி அமைப்பின் இணையதளத்தில் புத்தக கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணம் ரூ.10ஐ செலுத்தி முன்பதிவு செய்து வாசகர்கள் டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னை புத்தக கண்காட்சியில் 800 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. ஒரு லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் இடம் பெறுகின்றன. கடந்த ஆண்டு மொத்தம் 10 லட்சம் பேர் வருகை தந்தனர். இந்த ஆண்டு 10 லட்சம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக டிக்கெட் வழங்கப்பட உள்ளது.
சிறந்த எழுத்தாளர்கள் 6 பேருக்கு கலைஞர் பொற்கிழி விருதினை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தக கண்காட்சி தொடக்க நாளில் வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**
