ஆன்லைன் தடை சட்ட மசோதா ஒப்புதலுக்காக தமிழக அரசு காத்திருக்கும் நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆன்லைன் விளையாட்டு நிறுவன நிர்வாகிகளைச் சந்தித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.
இதனால் அமைச்சர்கள் முதல் அரசியல் கட்சியினர் வரை ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஆன்லைன் விளையாட்டால் இனி ஒரு உயிர் போனாலும் ஆளுநர்தான் பொறுப்பு என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கூறி வருகின்றனர்.
கடந்த டிசம்பர் 1ஆம் தேதி ஆளுநரை சந்தித்த தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போது,
இந்த மசோதாவில் சில சந்தேகங்கள் இருக்கிறது. அதை நான் தெளிவுபடுத்திக் கொண்டு ஒப்புதல் தருகிறேன் என்று ஆளுநர் கூறியதாக தெரிவித்தார்.
இந்நிலையில், ஆன்லைன் விளையாட்டு நிறுவன நிர்வாகிகள் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கடந்த டிசம்பர் 5ஆம் தேதி சந்தித்தனர் என ஆளுநர் மாளிகை மக்கள் தொடர்பு அலுவலகம் ஆங்கில ஊடகமான தி நியூஸ் மினிட்டிடம் தெரிவித்துள்ளது.
இ-கேமிங் கூட்டமைப்பினர் சென்னை ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்துள்ளனர்.
ஆன்லைன் விளையாட்டு கூட்டமைப்பின் பொதுக் கொள்கை இயக்குநர் தேவுதி பக்சி, ஜங்கில்ஸ் கேம்ஸ் நிறுவனத்திலிருந்து சஞ்சீவ் சாடி, கேம்ஸ் 24×7இன் தலைமை சட்ட அதிகாரி சமீர் சுக்,
கேம்ஸ் 24×7 பொதுக் கொள்கை இணை இயக்குநர் அக்ஷய் குப்தா உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டு நிறுவன பிரதிநிதிகள் ஆளுநரைச் சந்தித்துள்ளனர்.
ஆளுநரை சந்தித்த பிரதிநிதிகள் இந்த சந்திப்பு ரகசியமானது என்றும் கூறியிருக்கின்றனர்.
இ-கேமிங் கூட்டமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி சமீர் பார்டே, ஆளுநருடனான இந்த சந்திப்பு மசோதா தொடர்புடையதாகத் தான் இருந்தது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். ஆளுநர் எதேனும் உறுதியளித்தாரா என்ற கேள்விக்கு, அவர் எதுவும் கூறவில்லை.
பிரியா
56 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது சிபிஐ வழக்கு: தமிழகத்தில் எத்தனை?