சென்னை பெரம்பூரில் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த குளிர்சாதனம் வெடித்து சிதறியதில் பால் வியாபாரி உடல் கருகி உயிரிழந்தார்.
சென்னை, பெரம்பூரில் திருவிக மனவாளன் நகரை சேர்ந்த ஷாம் என்பவர் பால் வியபாரம் செய்து வருகிறார்.
இவருக்கும் சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த தனலட்சுமி என்பவருக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆடி மாதம் என்பதால் தனலட்சுமி தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் வீட்டில் தரைதளத்தில் உள்ள படுக்கை அறையில் ஷாம் தூங்கிகொண்டிருந்தார். அப்போது அந்த அறையில் பொருத்தப்பட்டிருந்த ஏசி திடீரென வெடித்தது.
ஏசி வெடித்த சத்தம் கேட்டு மேல் தளத்தில் இருந்து அவரது தந்தை பிரபாகரன் ஷாம் தூங்கி கொண்டிருந்த அறைக்கு சென்று பார்த்தார்.
அந்த அறையில் இருந்து புகை வெளியே வந்துகொண்டிருந்தது. கதவும் உள்புறமாக தாழிடப்பட்டிருந்ததால் உடனே திறக்கமுடியவில்லை. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் திறக்க முயன்றார். அப்போதும் திறக்க முடியவில்லை.
இதையடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. செம்பியம், மாதவரம் பகுதியிலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வந்து ஷாமின் அறையை திறந்தனர். ஆனால் அதற்குள் அவர் தீயில் உடல் கருகி உயிரிழந்தார்.
இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த பெரம்பூர் போலீசார் ஷாம் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஆறு மாதத்திலேயே ஷாம் உயிரிழந்ததால், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மோனிஷா