விபத்தில் மரணமடைந்த முசிறி கோட்டாட்சியர் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகை பெற்று வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். One crore insurance for Musiri RDO
அரசு அலுவலர்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்து போனாலோ அல்லது விபத்தின் காரணமாக நிரந்தர ஊனமடைந்தாலோ தனிநபர் விபத்து காப்பீட்டு தொகையாக 1 கோடி ரூபாய் நிதி பெற்றுத் தரப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதற்காக பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்தநிலையில் இன்று (ஜூன் 19) திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் முசிறி கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் அரசு அலுவலர்களுக்கான காப்பீட்டுத் தொகை ரூபாய் ஒரு கோடி பெற்று வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், “திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், மேக்குடி கிராமம், கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கடியாக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா இன்று (ஜூன் 19) காலை 11.45 மணியளவில் நான்கு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே திருச்சியிலிருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மோதியதில் நான்குசக்கர வாகனம் நிலைதடுமாறி அருகில் பழுது பார்ப்பதற்காக நின்று கொண்டிருந்த ஜேசிபி வாகனம் மீது எதிர்பாதாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையுமடைந்தேன்.முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனாவின் உயிரிழப்பு வருவாய்த் துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
ஆரமுத தேவசேனாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆரமுத தேவசேனாவின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு அண்மையில் அறிவித்த அரசு அலுவலர்களுக்கான காப்பீட்டுத் தொகை ரூபாய் ஒரு கோடி பெற்று வழங்கப்படும். மேலும், அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்து லட்சம் ரூபாய் மற்றும் குடும்ப பாதுகாப்பு நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். One crore insurance for Musiri RDO
