இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீஜேசுக்கு நடைபெறவிருந்த பாராட்டு விழாவை இரு முறை ரத்து செய்த கேரள அரசுக்கு கண்டனம் வலுத்து வருகிறது.
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப்பதக்கம் வென்றது. இதையடுத்து அணியின் கேப்டனும் கோல்கீப்பருமான ஸ்ரீஜேஷ் தனது ஓய்வை அறிவித்தார். ஸ்ரீஜேஷ் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்.
இதையடுத்து, அவருக்கும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி பாராட்டு விழா நடத்துவதாக அறிவித்தது. பின்னர், ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. திருவனந்தபுரத்தில் பாராட்டு விழா நடைபெறவிருந்தது. இதில், பங்கேற்க கண்ணுரில் இருந்து தனது மனைவி மற்றும் குழந்தைகளும் ஸ்ரீஜேஷ் திருவனந்தபுரம் சென்றிருந்தார்.
ஆனால், திடீரென்று கடந்த சனிக்கிழமை பாராட்டு விழாவை ரத்து செய்வதாக கேரள அரசு அதிகாரிகள் அறிவித்தனர். தொடர்ந்து, அவர் திருவனந்தபுரத்தில் இருந்து குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார். இது குறித்து, ஸ்ரீஜேஷிடம் கேட்ட போது, இந்த சூழலில் தான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறி ஒதுங்கிக் கொண்டார்.
ஸ்ரீஜேசுக்கு பாராட்டு விழா நடத்த இரு முறை அறிவிக்கப்பட்டு, ரத்து செய்தது விளையாட்டு ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதையடுத்து, விளையாட்டு ஆர்வலர்கள் கேரள அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கேரள விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கும் கல்வித்துறை அமைச்சகத்துக்கும் பாராட்டு விழாவை யார் நடத்துவது என்பதில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், முதல்வர் அலுவலகம் பாராட்டு விழாவை தள்ளி வைக்க செய்ய உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், ஸ்ரீஜேசுக்கு கேரள கல்வித்துறையில் இணை இயக்குநர் பதவியும் வழங்கப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
“கல்வியைக் காவி மயமாக்கும் முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள்” : ரவிகுமார் எம்.பி விமர்சனம்!