கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், பேருந்தில் பயணம் செய்த மூதாட்டி ஒருவர், எம்ஜிஆர் நடித்த எங்க வீட்டுப் பிள்ளை படத்தின் பாடலுக்கு நடனமாடிய வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கிராமங்களில் ஓடும் மினி பேருந்துகளில் சினிமா பாடல்கள் ஒலிபரப்பப்படுவது வழக்கம்.
பல காதலர்களுக்கு கலங்கரை விளக்கமாக, மினி பஸ் பாடல்கள் அமைந்திருக்கின்றன
நிறைய காதல்களை வளர்த்ததில் மினி பஸ்களுக்கு முக்கிய இடம் உண்டு. மெகந்தி சர்கஸ் திரைப்படத்தில் இந்த காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

இளையராஜா பாடல்கள் 90-களிலும், ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் 2k-களிலும் மினி பஸ்களில் காதலர்களிடம் ஆதிக்கம் செலுத்தியது குறித்து மெகந்தி சர்க்கஸ் திரைப்படத்தில் காட்சிப்படுத்தியிருப்பார்கள்.
மினி பஸ்களில் சில சமயங்களில் துள்ளல் பாடல்கள் இடம்பெறும் போது, சின்ன குழந்தைகள் தங்களை அறியாமல் நடனம் ஆடுவர்.
அந்தவகையில், பொள்ளாச்சி பேருந்து நிறுத்தத்திலிருந்து கோவை நோக்கி சென்ற அரசு பேருந்தில், மூதாட்டி ஒருவர் எம்.ஜி.ஆர் நடித்த எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் இடம் பெற்ற, ‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவன் மாம்பழம் வேண்டும் என்றான்’ என்ற பாடலுக்கு ஆடியுள்ளார்.
பேருந்தில் பயணித்த சக பயணிகள் மூதாட்டியின் நடனத்தை ரசித்ததோடு அதனை வீடியோவும் எடுத்தனர்.
அப்படி, வீடியோ எடுத்த ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் அதனை பதிவேற்றம் செய்ய பாட்டியின் நடனம்தான் இன்று இணையத்தில் ட்ரெண்டிங்காக இருக்கிறது.
தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் என்ற பழமொழிக்கேற்ப பேருந்தில் எம்ஜிஆர் பாடலுக்கு தன்னை மறந்து நடனம் ஆடிய மூதாட்டியின் வீடியோவை அனைவரும் ரசித்து வருகின்றனர்.
செல்வம்
